கோபியிலிருந்து கோவை சென்ற அரசுப் பேருந்து சேவூர் அருகே பழுதடைந்ததால் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் கோபி, நம்பியூர், சாவக்கட்டுபாளையம், சேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் , கோவையில் உள்ள விடுதியில் தங்கி, வாரம் ஒரு முறை தங்களது வீட்டிற்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர்களும் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கோபியிலிருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அரசுப் பேருந்து சேவூர் பந்தம்பாளையம் அருகே வந்த போது திடீரென பழுதடைந்தது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். இதனால் பந்தம்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிறகு திருப்பூரில் இருந்து மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் கோவை சென்றனர். இதனால் கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அவதிக்குள்ளாகினர். பயணிகள் கூறுகையில், பரபரப்பான காலை நேரத்தில் இதுபோல பேருந்துகள் பழுதடைந்ததால், நாங்கள் செல்ல வேண்டிய நேரத்துக்கு செல்ல முடியாமல் காலதாமதமாகிறது.
ஆகவே போக்குவரத்து துறையினர் இனியாவது பேருந்துகளை ஆய்வு செய்து, வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்றனர்.