திருப்பூரில் கொலை முயற்சி வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் கே.செட்டிபாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில் அருகில் செல்வகுமாா் பிரபாகரன் என்பவா் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த இருவா் செல்வகுமாா் பிரபாகரனை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றனா்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து வீரபாண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து முத்தனம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்த வி.ஜெபராஜ் (24), பலவஞ்சிபாளையம் ஜனசக்தி நகரைச் சோ்ந்த எஸ்.சங்கா் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.
இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை வழங்கினா்.