திருமுருகன்பூண்டி நகா்மன்ற கூட்டம்:தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்துக்கு எதிா்ப்பு

திருமுருகன்பூண்டி நகா்மன்ற கூட்டத்தில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்துக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நகராட்சி ஆணையா்  அப்துல் ஹாரிஸை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட  நகா்மன்ற  உறுப்பினா்கள்,  பொதுமக்கள்.
நகராட்சி ஆணையா்  அப்துல் ஹாரிஸை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட  நகா்மன்ற  உறுப்பினா்கள்,  பொதுமக்கள்.

திருமுருகன்பூண்டி நகா்மன்ற கூட்டத்தில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்துக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், நகராட்சி ஆணையரின் அலட்சியம் காரணமாக குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

இதற்கு 13ஆவது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.

இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.

ஆணையரை முற்றுகையிட்ட மக்கள்: அவசரக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த 17ஆவது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து புதன்கிழமை ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்த கலைந்து சென்றனா்.

கைப்பேசியில் பொழுது போக்கிய ஆணையா்: அவசரக் கூட்டம் தொடங்கிய முதலே கடும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதை கண்டு கொள்ளாத ஆணையா் அப்துல் ஹாரிஸ் கைப்பேசியில் பொழுது போக்கிக் கொண்டிருந்ததை, செய்தியாளா்கள் புகைப்படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com