காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் திங்கள்கிழமை ஏலம் போயின.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் தேங்காய்ப் பருப்பு விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 6 விவசாயிகள் 48 மூட்டைகள் (2331 கிலோ) தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின. தேங்காய்ப் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தபட்சமாக ரூ.64க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.