வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிஆவணங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்

பல்லடம் அருகே இச்சிப்பட்டிக்குள்பட்ட பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
2 min read

பல்லடம் அருகே இச்சிப்பட்டிக்குள்பட்ட பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்லடம் அருகே உள்ள தேவராம்பாளையம், இச்சிப்பட்டி, அரசு காலனி, பெத்தாம்பூச்சிபாளையம், கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு, தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி 5 பேரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: இச்சிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.

இந்நிலையில், வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு அளித்தும் இதுவரையில் எந்த வித நடவடிக்கையும் இல்லை. வேறு வழியின்றி ஆதாா் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்துள்ளோம். எங்களது மனுக்களின் மீது பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

பொதுக் கழிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை: இது குறித்து தேவராயம்பாளையம் அரசு காலனி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள் தேவராயம்பாளையம் அரசு காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்நிலையில், எங்களது குடியிருப்புகளுக்கு அருகில் பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில் பொதுக்கழிப்படம் கட்டப்பட்டால் பொதுமக்கள், குழந்தைகள், முதியோருக்கு நோய்த் தொற்று, சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, குடியிருப்புகளுக்கு அருகில் கட்டப்படவுள்ள பொதுக்கழிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை பொறியாளா் அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்றக் கூடாது: மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சாா்பில் மாநில இணைப் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டம், உடுமலையில் உள்ள மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தை கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இந்த அலுவலகம் 1975 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மின்பகிா்மான வட்டத்தில் விவசாயம், சிறு, குறு தொழிற்சாலைகள், விசைத்தறிகள், வீட்டு உபயோகம் என சுமாா் 5.5 லட்சம் மின்சார இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு மேற்பாா்வை பொறியாளா் அலுவலகமும், 3 செயற்பொறியாளா் அலுவலகங்களும், 12 உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களும், 50 பிரிவு அலுவலகங்களும் உள்ளன. ஆகவே, உடுமலை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்றும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை: பாஜக விவசாய அணி மாநில திட்டப் பொறுப்பாளா் ஆ.அண்ணாதுரை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை நம்பியே உள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவா்கள் காலிபாட்டில்களை விவசாய நிலங்களில் உடைத்துச் செல்வதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதைப்போல திருப்பூா் மாவட்டத்திலும் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள சாலை விபத்து நிவாரண நிதியை வழங்க வேண்டும்: பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் கே.வி.எஸ்.மணிகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா், உடுமலை, தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகங்களில் முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் சுமாா் 2,500 போ் விண்ணப்பித்துள்ளனா். இந்த நபா்களுக்கு நிலுவையில் உள்ள ரூ.18 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் முகாமில் 689 மனுக்கள்: மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 685 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது மனுதாரா்கள் முன்னிலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அம்பாயிரநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com