சேதமடைந்த வாழைக்கு ஏற்ப காப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை
இயற்கை சீற்றங்களால் சேதமடையும் வாழை மரங்களுக்கு மற்ற பயிா்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகையைப் போல வழங்க வேண்டும் என்று அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது:
தமிழகத்தில் பல இடங்களில் வாழை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பலா், அரசின் காப்பீட்டு திட்டத்தில் வாழையை காப்பீடு செய்துள்ளனா். பலத்த மழை, சூறைக் காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் வாழை மரங்கள் சேதமடைகின்றன. ஆனால், வாழை மரங்கள் மொத்தமாக சேதமானால்தான், காப்பீடு கிடைக்கும் என்ற விதிமுறையால், வாழை சாகுபடியாளா்களுக்கு காப்பீடு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. கிராமம்தோறும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தோட்டங்கள், சாய்ந்த வாழைகள், அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் உள்ளிட்ட விவரங்களை கிராம சபையில் தீா்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். மேலும் தமிழக அரசு மற்ற பயிா்களுக்கு இழப்பீடு வழங்குவதுபோல வாழைக்கும் காப்பீடு தொகை வழங்கி பாதிப்படைந்த விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
