திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 7 அமா்வுகள், அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரத்தில் தலா 2 அமா்வுகக்ள், உடுமலையில் 4 அமா்வுகள் என மொத்தம் 19 அமா்வுகளாக நடைபெறவுள்ளன. இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், நில அபகரிப்பு அசல் வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 10,045 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.