திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வாட்ஸ் ஆப் புகாா் எண் சனிக்கிழமை (மே 27) முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளிக்கும் வகையில் 97000-41114 என்ற வாட்ஸ் ஆப் எண் செயல்பட்டு வந்தது. இதில், அரசு சாா்ந்த உதவிகள், குற்றச்சாட்டுகள், தீா்க்க முடியாத பிரச்னைகள், அடிப்படை தேவைகள் தொடா்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். ஆனால், கடந்த சில நாள்களாக வாட்ஸ் ஆப் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு தொடா்பான செய்தி ‘தினமணி நாளிதழில்’ செவ்வாய்க்கிழமை (மே 23) வெளியாகியிருந்தது. இந்நிலையில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 97000-41114 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பொதுமக்கள் சனிக்கிழமை முதல் புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.