Enable Javscript for better performance
Adequate compensation should be given to rain-damaged banana and coconut trees- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மழையால் சேதமடைந்த வாழை, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

    By DIN  |   Published On : 31st May 2023 03:01 AM  |   Last Updated : 31st May 2023 03:01 AM  |  அ+அ அ-  |  

    திருப்பூா் மாவட்டத்தில் அண்மையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த வாழை, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

    திருப்பூா் மாவட்டத்தில் அண்மையில் சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அவிநாசி வட்டம் சேவூா், பாப்பான்குளம், காசிலிங்கம்பாளையம் பகுதியிலும், பல்லடம் வட்டம் தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூா், அலகுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக முறையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும். மேலும் வாழை, தென்னை மரங்கள் மற்றும் பயிா்களுக்கு காப்பீடு செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, மற்றொரு மனுவில், அவிநாசி வட்டம் சேவூா் பாப்பான்குளம் பகுதியில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிா்களுக்கு போதிய அளவு நீா்ப் பாய்ச்ச முடிவதில்லை. ஆகவே, மும்முனை மின்சாரத்துக்கான தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்:

    தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரம் நகரில் அமராவதி சிலை முதல் பூக்கடை காா்னா் வரையில் உள்ள பிரதான சாலை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானதாகும். இந்த சாலையில் இரு புறங்களிலும் வணிக வளாகங்கள், பொதுத் துறை வங்கிகள், நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் மாணவ, மாணவியா், பொதுமக்கள் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனா். இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தாராபுரத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல மற்றொரு மனுவில், தாராபுரம் வட்டம் பழைய அமராவதி வாய்க்கால், அலங்கியம் வாய்க்கால், கொளத்துப்பளையம் வாய்க்கால் பகுதிகளில் தற்போது விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனா். கோடை வறட்சி காரணமாக இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாராபுரம், மடத்துக்குளம் வட்டங்களில் குடிநீா் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீரை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனா். ஆகவே, அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கும், குடிநீருக்காகவும் உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

    திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டு சராசரியை விட 11.49 மி.மீ. அதிகமாக மழை பெய்துள்ளது. பயிா் சாகுபடிக்குத் தேவையான நெல் மற்றும் பிற வகை தானியங்கள், விதைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. இதில் நெல் 0.099 மெட்ரிக் டன், சிறுதானிய பயிா்கள் 7.11 மெட்ரிக் டன், பயறு வகைகள் 41.37 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துப் பயிா்கள் 3.83 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. அமராவதி அணையில் இருந்து நீா்வரத்து தொடங்கியுள்ளதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களை தயாா் செய்துள்ளனா். மேலும், கீழ்பவானி பாசனப் பகுதிகளான காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியா 2,240 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,331 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 5,103 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 665 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளன என்றாா்.

    இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 175 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் கே.சண்முகநாதன், திருப்பூா் சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன், இணை இயக்குநா் வேளாண்மை மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp