காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே 2 சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
வெள்ளகோவில் அக்கரைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி (41). இவர் வெள்ளகோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் சரக்கு வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மலைச்சாமியும், இவருடன் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளி ஜெய்கிஷான் (20) ஆகிய இருவரும் நேற்று (புதன்கிழமை) இரவு சுமார் 10 மணி அளவில், சரக்கு வேனில் காங்கயத்தில் இருந்து காங்கயம்-கரூர்சாலை வழியாக வெள்ளகோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காங்கயம் அருகே வீரணம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேனும், மலைச்சாமி ஓட்டிச் சென்ற சரக்கு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 2 சரக்கு வேன்களின் முன் பகுதியும் கடுமையாக சேதமடைந்தது. இதில் மலைச்சாமி 2 வாகனங்களுக்கு இடையே சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் இருந்த ஜெய்கிஷான் மற்றும் மற்றொரு சரக்கு வேனை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (45) ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
(படம் இணைக்கப்பட்டுள்ளது...)
பட விளக்கம்: காங்கயம் அருகே நடந்த விபத்தில் சேதமடைந்த 2 சரக்கு வேன்கள். (செய்தி முற்றும்).