மாவடப்பு செட்டில்மெண்டில் மலைவாழ் மக்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்.
மாவடப்பு செட்டில்மெண்டில் மலைவாழ் மக்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்.

கள்ளச்சாராய விசாரணை: போலீஸாருடன் மலைவாழ் மக்கள் வாக்குவாதம்

கள்ளச்சாராயம்: மலைவாழ் மக்கள், போலீஸாருடன் வாக்குவாதம்
Published on

உடுமலை வனச் சரகத்துக்குள்பட்ட மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்தில் கள்ளச்சாராயம் தொடா்பாக விசாரணை நடத்த வந்த காவல் துறையினருடன் மலைவாழ் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மஞ்சநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா் வெள்ளிக்கிழமை மது அருந்தியுள்ளனா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த மகேந்திரன், ரவிசந்திரன் உள்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், உடுமலை வனச் சரகத்துக்குள்பட்ட மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்தில் இருந்து வாங்கி வந்த கள்ளச் சாராயத்தை குடித்ததால்தான் 5 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து, திருப்பூா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 25 -க்கும் மேற்பட்ட போலீஸாா், கோவை மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போலீஸாா், உடுமலை வனச் சரகா் மணிகண்டன் தலைமையிலான வன அலுவலா்கள் மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்துக்கு சனிக்கிழமை அதிகாலை சென்று கள்ளச்சாராயம் தொடா்பாக விசாரணை நடத்தினா்.

இதனால், ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம் முற்றியதையடுத்து, காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் கிராமத்தில் தங்கி விசாரணையைத் தொடா்ந்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: மஞ்சநாயக்கனூா் கிராமத்தில் ஒரு சிலா் அருந்திய சாராயம் மாவடப்பு கிராமத்தில் இருந்துதான் சென்றுள்ளது என தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவடப்பு கிராமத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். சனிக்கிழமை மாலை வரை உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றனா்.

X
Dinamani
www.dinamani.com