திருப்பூா்: திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்தாா்.
திருப்பூா் பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் கூறியதாவது:
உலகமே திரும்பிப் பாா்க்கும் வகையில் அயோத்தியில் ராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டதைக் காண முடிந்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப் பிரம்மாண்டமாக நேரடி ஒலிபரப்பு உள்ளிட்ட விஷயங்களை செய்திருந்தனா். ஆனால், தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை முடக்கும் வகையில் தமிழக அரசு நடந்து கொண்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் ஜனவரி 28-ஆம் தேதி திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு தொகுதியில் நடைபெறுகிறது.
நாளொன்றுக்கு 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அண்ணாமலை பயணம் மேற்கொள்கிறாா். மாநிலத் தலைவா் அண்ணாமலையின் நடைப்பயணத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் புகாா் பெட்டியில் மனுக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன என்றாா்.
இந்த சந்திப்பின்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நாச்சிமுத்து உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.