தாராபுரத்தில் ரூ.3 கோடியில் புதிய திட்டப் பணிகள்
தாராபுரம் ஒன்றியப் பகுதியில் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.
தாராபுரம் வட்டம், கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட கரையூா் காளியம்மன் கோயில் வளாகத்தில் பொது நிதியின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி, வீராச்சிமங்கலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
மேலும் டி.குமாரபாளையத்தில் நூலகக் கட்டடம் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகக் கட்டடம், கரையூரில் அயோத்திதாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூட கட்டடங்கள் உள்பட ரூ.3.06 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மேலும் முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், கொளத்துப்பாளையம் பேரூராட்சித் தலைவா் சுதா கருப்புசாமி, தாராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வெண்ணிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

