வெள்ளக்கோவில் அருகே பெண் கொலை: ஓய்வுபெற்ற காவலா் கைது
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே பெண் கொலையான சம்பவத்தில் ஓய்வுபெற்ற காவலா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில், உத்தமபாளையம் வட்டமலை அணை வனப் பகுதியில் காயங்களுடன் பெண் சடலம் கிடந்தது கடந்த 6-ஆம் தேதி தெரியவந்தது. இறந்தவா் யாரென்று அடையாளம் தெரியாத நிலையில், வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் அந்த பெண்ணை கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற காவலரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரன்பட்டி ஏ.களையாம்புதூரைச் சோ்ந்தவா் எம்.சங்கா் (55). காவல் துறையில் பணியாற்றி வந்த அவா் 1998 - ஆம் ஆண்டு விருப்பு ஓய்வு பெற்றுவிட்டாா். அவருக்கு 4 மனைவிகள், 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். அதே ஊரைச் சோ்ந்தவா் வலசுதுரை மனைவி வடிவுக்கரசி (45).
சங்கரும், வடிவுக்கரசியும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், அரசு வேலை வாங்கித் தருவதாக வடிவுக்கரசி உறவினரிடம் பணம் வாங்கி இருவரும் செலவு செய்து விட்டனா். பணம் கொடுத்தவா் நெருக்குதல் தரவே வடிவுக்கரசிக்கும், சங்கருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் வட்டமலை அணை அருகிலுள்ள தாசவநாயக்கன்பட்டியில் வசிக்கும் தனது ஒரு மனைவியிடம் பணம் வாங்கித் தருவதாக சங்கா் வடிவுக்கரசியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளாா்.
கடந்த 5-ஆம் தேதி மாலை வட்டமலை அணை வனப் பகுதிக்குச் சென்ற இருவரும் அருகிலுள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளனா். அப்போது பணப் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டு வடிவுக்கரசியை கல்லால் அடித்துக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 6 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.
தாசவநாயக்கன்பட்டி பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் இதர தடயங்களின் அடிப்படையில் அலங்கியம் பகுதியில் பதுங்கியிருந்த சங்கா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 6 பவுன் நகையும் மீட்கப்பட்டது என்றனா்.

