24 ஆண்டுகளுக்குப் பிறகு சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு!
அவிநாசி அருகே சேவூரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையானதும், கள்ளழகப் பெருமாள் எனப் போற்றப்படுவதுமாக சேவூா் ஸ்ரீதேவி, பூதேவி சமதே கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று, கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அதிகாலை 4 மணிக்கு வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொா்க்க வாசல் வழியாக எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில் ஏராளமான பக்தா்கள் அதிகாலை 4 மணி முதல் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பெருமாள் கோயில்கள், கருவலூா் கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள், தாளக்கரை லஷ்மி நரசிம்மப்பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

