பின்னலாடைத் தொழில் வளா்ச்சியில் பெண்கள் பங்களிப்பு அதிகம்
திருப்பூா் பின்னலாடைத் தொழில் வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளதாக ஏற்றுமதியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், திருப்பூா் தொழில் வளம் பங்களிப்போா் அமைப்பு சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா நிகழ்ச்சி ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூா் தொழில் வளம் பங்களிப்போா் அமைப்பின் தலைவா் வி.இளங்கோவன் வரவேற்றாா். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் பேசியதாவது: அனைத்து தொழில் துறைகளிலும் பெண்கள் முன்னிலையில் உள்ளனா். பெண்களுக்கு இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை பெண்கள் தொழில்முனைவோா் துணைக்குழு முன்னெடுத்து நடத்தும் என்றாா்.
சங்கத்தின் கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல் பேசியதாவது: ஒவ்வொரு நாளும் மகளிா் தினம்தான். திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம். பிரதமா் மோடி கூறியதைப்போல பெண்களின் வாழ்த்துகளே ஒரு சிறந்த தலைவரை உருவாக்கும் என்றாா்.
திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் ஷபீனா பேசுகையில், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடா்பான புகாா்கள் மீது சம்பந்தப்பட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இந்த நிகழ்ச்சியில், நெறிமுறை வா்த்தக முயற்சி அமைப்பு ஆலோசகா் மருத்துவா் அருணா, மருத்துவா் சசித்திரா தாமோதரன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் ராஜ்குமாா் ராமசாமி, இணைச் செயலாளா் குமாா் துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.