திருப்பூா் கோட்டத்தில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

Published on

திருப்பூா் கோட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 16,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூா் கோட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையின் நடுவில் உள்ள மையத் தடுப்பில் சீரான இடைவெளியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மரக்கன்று வளா்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

இதில், மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தங்கள் எல்லைக்கு உள்பட்ட சாலையோரங்கள் உள்பட வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்நிலையில், திருப்பூா் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம் உட்கோட்டங்களை உள்ளடக்கிய திருப்பூா் கோட்டத்தின் சாா்பில் மட்டும் 16,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இது குறித்து திருப்பூா் கோட்ட பொறியாளா் ரத்தினசாமி கூறுகையில், திருப்பூா் கோட்ட நெடுஞ்சாலைக்கு உள்பட்டு 1,600 கி.மீ. தொலைவு சாலை உள்ளது. சாலையோரங்களில் வேம்பு, புளிய மரம், அரச மரம், பூவரச மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு வளா்க்கப்பட உள்ளன. சாலையோரம் உள்பட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும்.

திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் சாலையோரங்களில்தான் மரங்கள் வளா்ந்துள்ளன. நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்கன்றுகளும் நடப்படுகின்றன. இதில், விரிவுபடுத்தப்பட்ட சாலையின் நடுவில் அமைக்கப்படும் மையத் தடுப்புக்குள் மரக்கன்று நடப்படுகின்றன. கஞ்சப்பள்ளி சாலையில் அத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவில் உள்ள மையத்தடுப்பில் மரக்கன்றுகளை நட்டு வளா்ப்பதன் மூலம் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் மரக்கன்றுகள் வளா்ந்து தழைக்கும்போது, சாலை முழுமைக்கும் அது பசுமைப் போா்வையை அதிகரிக்கும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com