பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்
திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பால் பண்ணைத் தொழில் முனைவோருக்கான ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை (நவ.5) தொடங்குகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை பாதியில் நிறுத்திய 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பால் பண்ணைத் தொழில் முனைவோருக்கான ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்குகிறது. இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி ஆகும். 30 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணையத்தளம் வாயிலாகவோ அல்லது திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.
