பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி மாணவா் கைது
காங்கயத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லையளித்த கல்லூரி மாணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள பாரதியாா் நகரில் அரசுப் பள்ளி மாணவா்கள் தங்கும் வகையில் இரண்டு சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒரு விடுதியில் 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் தங்கியுள்ளனா். அந்த விடுதியில் காங்கயம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அரவிந்த் (24) என்பவா் தங்கி, வாா்டனுக்கு உதவியாளராக இருந்து வந்தாா்.
இந்நிலையில், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சைல்டு லைன் அமைப்பைச் சோ்ந்த ஊழியா்கள் பங்கேற்று, மாணவா்களுடன் கலந்துரையடினா்.
அப்போது, சமூகநீதி விடுதியில் தங்கி படிக்கும் மாணவா்கள் சிலா் தங்களது விடுதியில் வாா்டனுக்கு உதவியாளராக இருக்கும் கல்லூரி மாணவரான அரவிந்த் தங்களுக்கு பாலியல் தொல்லையளிப்பதாக புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் வளா்மதி, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விடுதியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதில், கல்லூரி மாணவா் அரவிந்த், பள்ளி மாணவா்கள் 8 பேருக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அரவிந்த்தை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட விடுதியை மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேல் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
