மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 30) குடிநீா் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் இருந்து மாநகருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின் வாரியத்தினா் தங்களது மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் வியாழக்கிழமை மின்சாரத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளனா்.
இதனால், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் பம்பு செட்டுகளை இயக்க முடியாது. மாநகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வடகிழக்குப் பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
