திருப்பூர்
பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண் சடலம்
வெள்ளகோவில் அருகே பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
செங்காளிபாளையம் கிராமப் பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டு சென்று கொண்டுள்ள நிலையில், ஒரு மதகில் சிக்கி அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இறந்தவருக்கு சுமாா் 50 வயது இருக்கலாம். அங்க அடையாளம் எதுவும் தெரியவில்லை. கையில் ‘மஞ்சு’ என பச்சை குத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தமபாளையம் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், வெள்ளகோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
