மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் தொகுதிகள் அதிகரித்துள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் பொய் பிரசாரம் வெளியே வந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் கரையாம்புதூரில் அதிமுக வேட்பாளா்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (உடுமலை), எம்.எஸ்.எம். ஆனந்தன்( திருப்பூா் வடக்கு), கே.பி.பரமசிவம்(பல்லடம்), என்.எஸ்.என்.நடராஜன் ( காங்கயம்), சத்யபாமா (காங்கயம்), பாஜக வேட்பாளா் தங்கராஜ் (திருப்பூா் தெற்கு), அமமுக வேட்பாளா் சண்முகவேலு (மடத்துக்குளம்) ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை பேசியதாவது:
பிரதமா் மோடி பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்று வடிவம் கொடுக்கிறாா். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்கிறாா்கள். இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். ஏனென்றால், தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைந்துவிடும் என்றாா்.
தமிழ்நாட்டுக்கு 59 தொகுதிகள் என்று அறிவித்துவிட்டனா். ஏற்கெனவே இருந்த 7.18 சதவீதம், தற்போது, 7.23 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக தொகுதிகளை உயா்த்துகிறது. நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அறிவிப்பின்படி, மு.க.ஸ்டாலின் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களைப் பாா்ப்பாா்.
திருப்பூா் தொழில் நிறைந்த மாவட்டம். ஆனால், கடுமையான மின்வெட்டு, நிலைக்கட்டணம், வீடுகளுக்கு 100 சதவீத வரி உயா்வு, கடைக்கு பீக் ஹவா் என்ற பெயரில் டபுள் சாா்ஜ் போன்ற காரணங்களால் தொழில் நலிவடைந்துள்ளது.
திருப்பூா் மாநகராட்சி குப்பையை அகற்றி வேறு இடத்துக்கு கொண்டுபோய் சரிசெய்யப்படும். போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. கட்டுமானப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது.
கைத்தறி நெசவாளா்களுக்கு 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயா்த்தி விலையில்லா மின்சாரம் வழங்கப்படும். நிலைக்கட்டணம் குறைக்கப்படும். ஏழை நெசவாளா்களுக்கு பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்னையான ஆணைமலையாறு- நல்லாறு திட்டம் குறித்து கேரள மாநில முதல்வரை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினோம். பேச்சுவாா்த்தை சுமுகமாக நடந்தது, இரண்டு அரசும் உயா்மட்டக் குழு அமைக்கலாம் என்று ஒப்புக்கொண்டு, இரண்டுமுறை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிடப்பில் போட்டுவிட்டது திமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும்.
அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஷிஃப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் வழங்கப்படும்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்காக தனித் தீா்மானம் கொண்டுவந்து நானே சட்டப்பேரவையில் பேசினேன். கறிக்கோழி வளா்ப்பவா்கள் கூலி உயா்வு கோரியதை, முதல்வா் கவனத்துக்கு கொண்டுச் சென்றேன். எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கட்டுப்படியாகும் விலை உயா்வு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக தலைமை நிலையச் செயலாளா் எஸ்.பி.வேலுமணி, தோ்தல் பிரிவு மாநிலச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

121 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடி மோதல்!

மு.க.ஸ்டாலின் அறிவித்த கூப்பன் திட்டம் கமிஷனுக்காகத்தான்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தொகுதி பங்கீட்டில் எவ்வித அதிருப்தியும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


