நூல், பஞ்சு விலை உயா்வால் உற்பத்தி பாதியாக குறைப்பு: திருப்பூா், கோவை விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு

நூல், பஞ்சு விலை உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
 பருத்தி நூல் பைகள்.
பருத்தி நூல் பைகள்.
Updated on

நூல், பஞ்சு விலை உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் பல்லடத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கியத் தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கெனவே ஆள்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித் துணிக்கு உரிய விலை கிடைக்காதது உள்பட பல்வேறு காரணங்களால் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் பஞ்சு விலை உயா்வால் நூல் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை விலை உயா்ந்தது. ஆனால், ஜவுளி உற்பத்தியாளா்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளி தேக்கமடைந்துள்ளது.

மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், அங்கு உள்ள ஜவுளி உற்பத்தியாளா்களால் விலையை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக இருப்பதால் அவா்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு தனி மின் கட்டண டேரிப் அமைப்பு ஏற்படுத்தி மின் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும். மேலும் உள்ளூா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் நூல் மற்றும் கழிவு பஞ்சு எனும் கேம்பா் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். உள்ளூரில் கேம்பா் பஞ்சு,நூல் விலை சீராக இருந்தால் தான் இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்த பலன்களை இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் பெற முடியும்.

தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தொழிலாளா்களுக்கு வேலை வழங்கும் வகையில் ஒரு சிஃப்ட் மட்டும் இயங்கும். அதற்காக புதன்கிழமை (பிப்.11) முதல் இரண்டு வாரம் ஜவுளி உற்பத்தி குறைக்கப்படுகிறது. ஆலோசனை நடத்தி தேவைப்படும்பட்சத்தில் முழுமையாக ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படும் என்றாா்.

விசைத்தறியாளா்கள் கோரிக்கை

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் ஆகியோா் கூறியதாவது:

ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை முதல் 50 சதவீதம் உற்பத்தி குறைப்பு என்று அறிவித்துள்ளாா்கள். தற்போதுதான் பொங்கல் விடுமுறை மற்றும் தைப்பூச விழாக்கள் முடிந்து விசைத்தறிகள் முழு நேரமும் இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என்பது சிறு, குறு விசைத்தறியாளா்களையும், விசைத்தறி தொழிலாளா்களையும் பெரிதும் பாதிக்கும். எனவே விசைத்தறி தொழிலையும், அதனை நம்பி வாழும் விசைத்தறியாளா்கள், தொழிலாளா்களையும் பாதுகாக்கும் வகையில் சிறு, குறு விசைத்தறியாளா்களுக்கு பாவு நூல் தொடா்ந்து வழங்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com