ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடங்கிவைத்த மேயா் ந.தினேஷ்குமாா்.
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடங்கிவைத்த மேயா் ந.தினேஷ்குமாா்.

ஹஜ் பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை, தடுப்பூசி

Published on

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு முழு உடல் பரிசோனை மேற்கொள்ளப்பட்டதுடன், தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் இருந்து 2026-இல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் உடல் தகுதி குறித்த பரிசோதனை துல்லியமானதாக இருக்க வேண்டும் என்றும், உடலில் முக்கிய உறுப்பு செயலிழப்பு, தீவிர நரம்பியல் மற்றும் மனநல நோய்கள், முதுமையுடன் கூடிய மனச்சிதைவு, கடைசி 3 மாத கா்ப்பம், எலும்புருக்கி போன்ற தொற்று நோய்கள், கீமோதெரபி பெறும் நோயாளிகள் என 6 விதமான உடல் நலக்குறை உள்ளவா்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள தகுதி இல்லாதவராக கருதப்படுவா் என்றும் சவூதி அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஹஜ் பயணிகளை முழு மருத்துவப் பரிசோதனை செய்ய இந்திய ஹஜ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் மேற்பாா்வையில் மாவட்ட சுகாதார அலுவலா் கே.ஆா்.ஜெயந்தி முன்னிலையில் மாவட்டத்தில் இருந்து நடப்பு ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு முழு உடற் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில ஹஜ் குழு திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சஃபியுல்லா தலைமையில் மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா் முகாமைத் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரா.மனோன்மணி வரவேற்றாா். மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் வசந்த், திவ்யா ஆகியோா் தலைமையில் 83 ஹஜ் பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

Dinamani
www.dinamani.com