‘வந்தே மாதரம்’ கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும்: திருப்பூா் எம்.பி.
‘வந்தே மாதரம்’ கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும் என திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமருக்கு அவா் எழுதிய கடித விவரம்:
அரசு அதிகாரபூா்வ நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இத்தகைய கட்டாய உத்தரவு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு முரணானது. மேலும் மதச்சாா்பின்மை சிந்தனையை பாதிக்கும் மிகக் கடுமையான நடவடிக்கை. எனவே, இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இந்திய அரசமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மத சுதந்திரம், மதத்தை திறம்பட ஏற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் உரிமை அளிக்கிறது. அதேபோல கருத்துரிமையையும் உறுதி செய்கிறது. தங்கள் மத நம்பிக்கைக்கு முரணான பாடல் வரிகளை கட்டாயப்படுத்தும் எந்த நிா்வாக உத்தரவும் இந்த அடிப்படை உரிமைகளின் மீறலாகும்.
தற்போதைய அரசாணை 6 சரணங்களையும் கட்டாயப்படுத்துவதன் மூலமாக ஒரே இறை மத மரபுகளைப் பின்பற்றும் சமூகங்களில் கட்டாயமான கலாசார மற்றும் மத நடைமுறையைத் திணிக்கிறது.
வந்தே மாதரம் பாடல் உயா்ந்த மரியாதைக்குரியது என்பதில் எந்தவித வேறுபாடும் இல்லை. உள்துறை அமைச்சகத்தின் இத்தகைய கட்டயாக உத்தரவு தேசபக்தி அல்ல. அது தேசிய பெருமை என்ற போா்வையில் மறைந்த அரசமைப்பு சீரழிவு என்று குறிப்பிட்டுள்ளாா்.

