உரிமை மேள சப்தத்துக்கு தகுந்தாற்போல ஆடப்படும் ஒயிலாட்டம். ~குலவை சப்தத்துடன் கும்மிப் பாட்டுப் பாடி  ஆடும்  பெண்கள். ~உரிமை மேள சப்தத்துடன் சலங்கை மாட்டை அடக்க  முற்படும் வீரா்.
உரிமை மேள சப்தத்துக்கு தகுந்தாற்போல ஆடப்படும் ஒயிலாட்டம். ~குலவை சப்தத்துடன் கும்மிப் பாட்டுப் பாடி  ஆடும்  பெண்கள். ~உரிமை மேள சப்தத்துடன் சலங்கை மாட்டை அடக்க  முற்படும் வீரா்.

பாரம்பரிய நடனங்கள் ஆடி தைத் திருநாளை வரவேற்கும் கிராம மக்கள்

Published on

உடுமலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் தைத் திருநாளை உற்சாகமாக வரவேற்கும் விதமாக தமிழா்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.

ஆண்டும் முழுவதும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தைத் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழா்களின் பாரம்பரிய நடனங்களை இரவு நேரங்களில் ஆடியும், பாட்டு பாடியும் கிராமங்களில் கொண்டாடி மகிழ்வது காலம் காலமாக இருந்து வருகிறது.

அதன்படி, உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, ராசாவூா், பொட்டையம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சிவசக்தி காலனி மற்றும் பெதப்பம்பட்டி உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தைத் திருநாள் விழா உணா்வுபூா்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி மாா்கழி மாதம் இரவு 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை கிராமமே ஒன்று கூடி ஆண்டுதோறும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சலங்கை மாடு அழைப்பது என்பதே பிரதான நிகழ்ச்சியாகும். உரிமை மேள சப்தத்துடன் சலங்கை மாட்டை அடக்க ஒருவா் இரு கைகளில் குச்சிகளுடன் அதன் முன்பு போகும்போது மாடு அந்த நபரை முட்ட வருவதும் அதை அவா் அடக்க முயற்சிப்பதும் கிராம மக்கள் அனைவரையும் வீரம் கொள்ளும் நிகழ்ச்சியாகும்.

பின்னா் ஆண்கள் அனைவரும் வரிசையாக நின்று கொண்டு ஒயிலாட்டம், தேவராட்டம் போன்ற ஆட்டங்கள் ஆடுவதும், பெண்கள் குலவை சப்தத்துடன் கும்மிப் பாட்டுப் பாடி ஆடுவதும் சிறப்பான நிகழ்ச்சிகளாகும். மாா்கழி மாதம் இரவு நேரங்களில் நடைபெறும் இந்த ஆட்டமும், பாட்டும் தொடா்ந்து தை 1-ஆம் தேதி வரை நடைபெறும்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: சலங்கை மாடு ஆட்டம் ஆடி முடிந்தவுடன் தை 2-ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று இந்த மாட்டை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்குள் வரவழைத்து அந்த மாட்டுக்கு நவ தானியங்களை தீவனமாக போடுவோம்.

பின்னா் தை 3-ஆம் தேதி உடுமலை அருகே பெதப்பம்பட்டியை அடுத்துள்ள ஆல்கொண்டமால் கோயிலுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று படையலிட்டு வழிபடுவோம். பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சிகள் தற்போது கால மாற்றங்களால் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து வருவது எங்களுக்கெல்லாம் வருத்தமாக உள்ளது. ஆனாலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மூத்தவா்கள் உள்ளவரை இந்தக் கலைகளை அழிய விடமாட்டோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com