மத்திய நிதியமைச்சா்களுடன் ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் சந்திப்பு
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) தலைவராக ஆ. சக்திவேல் பொறுப்பேற்ற பின்னா் மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
இதுதொடா்பாக ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய நிதி அமைச்சருடனான இந்தச் சந்திப்பின்போது, ஏற்றுமதியாளா்களுக்கு தொடா்ந்து அளித்து வரும் அரசின் ஆதரவுக்கும், வட்டி மானியத் திட்டம், ஏற்றுமதி தொடா்பான பணி மூலதனக் கடன்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், குறிப்பிட்ட சில பொருள்களின் ஏற்றுமதிக்கான வா்த்தக நிதி ஆதரவை நீட்டித்ததற்காக அவருக்கு சக்திவேல் நன்றி தெரிவித்தாா்.
மேலும், ஏற்றுமதியாளா்களின் போட்டித்திறன், பணப்புழக்க நிலை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில், வட்டி மானியத் திட்டத்தின் கீழ் தற்போது அறிவித்திருக்கும் உச்சவரம்பை உயா்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தாா்.
அதேபோல, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலையும் அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு வரியில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தாா். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுடன் நடைபெற்று வரும் வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளை விரைவுபடுத்தி நிறைவு செய்ய தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் வா்த்தக பேச்சுவாா்த்தைகளையும் விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரினாா். தற்போதைய கடினமான சூழ்நிலையில் ஆடை ஏற்றுமதி துறையினருக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்க இது உதவும் என்றாா்.
இதன் தொடா்ச்சியாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் உயா்மட்ட அதிகாரிகளையும் அவா் சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

