விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் இருப்பதைபோல தனியாா் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அவசியம் அமைக்க வேண்டும் என்று, நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் மகன் நிஷாந்த் (19). இவா் கோவையிலுள்ள தனியாா் கல்லுாரியில் பி.பி.ஏ. படித்து வந்தாா். சமீபத்தில் கள்ளிப்பாளையத்தில் இருந்து பல்லடம் செல்வதற்காக தாராபுரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியாா் பேருந்தில் நிஷாந்த் ஏறியுள்ளாா். பயணிகள் கூட்டம் அலைமோதியதால் படிக்கட்டில் நின்று பயணித்துள்ளாா். பல்லடம் அருகே வடுகபாளையம் பிரிவு பகுதியில் பேருந்து வந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பல்லடம் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிஷாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக பல்லடம் நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு இயக்கத் தலைவா் மணிக்குமாா் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படாததே இதுபோன்ற விபத்துகளுக்கு முதன்மைக் காரணம். பேருந்துகள் தாமதமாக வருவதால் ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது. 50 போ் செல்ல வேண்டிய பேருந்தில் 100-க்கும் மேற்பட்டோா் பயணித்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விதிமுறைகளை மீறி பயணிகள் படிக்கட்டுப் பயணம் மேற்கொள்வதைக் கண்காணித்து தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட பிறகே விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. அதேபோல பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தனியாா் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.










