வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
அவா்கள் எண்ணெய் மசாஜ் செய்துகொண்டு பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளிலும், காவிரிக் கரையோரப் பகுதிகளிலும் குளித்து மகிழ்ந்தனா்.
தொடா்ந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு வழியாக பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி வரை குடும்பத்தினருடன் பரிசல் பயணம் செய்து, பாறை குகைகள், அருவிகளின் அழகை கண்டு ரசித்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இருந்தபோதிலும் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனா்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், பரிசல் துறை, மீன் விற்பனை நிலையம், உணவருந்தும் பூங்கா, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

