நெருக்கடியில் பாலக்கோடு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக்!

தருமபுரி, ஜூன் 9: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக், அரசு நிதியுதவி பெறும் கல்லூரியாக மாற்றப்பட்டாலொழிய, அதனை தொடர்ந்து நடத்துவது இயலாது என்ற நிலை உருவாகியுள
Updated on
1 min read

தருமபுரி, ஜூன் 9: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக், அரசு நிதியுதவி பெறும் கல்லூரியாக மாற்றப்பட்டாலொழிய, அதனை தொடர்ந்து நடத்துவது இயலாது என்ற நிலை உருவாகியுள்ளது.

1985-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட கல்லூரியில், ஆலைத் தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகளின் வாரிசுகளுக்கு 50 சதவீத இடங்களும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மதிப்பெண்களின் அடிப்படையிலும் நிரப்பப்பட்டு வந்தன. பிறகு ஆலையின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, சுயநிதி கல்லூரியாக மாறிய பின்னர், 50 சதவீத இடங்கள் அரசின் கலந்தாய்வு மூலமும், மீதி இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் நிரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது இக்கல்லூரிக்கு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்திட மாணவர்கள் முன்வருவதில்லை. இடங்களை காலியாக வைத்திருக்க மனமில்லாமல், அரசு கலந்தாய்விலேயே கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர். கட்டடப் பொறியியல், இயந்திர பொறியியல், இயந்திர பொறியியல் (டூல் அண்ட் டைமேக்கிங்), மின்னியல் மற்றும் மின்னணு தொடர்பியல், கணினி பொறியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 420 இடங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் நிரப்பப்பட வேண்டிய இடங்கள் 210. இதில் 2009-10-ம் ஆண்டில் 110 பேரும், 2010-11-ம் ஆண்டில் 100 பேரும் சேர்ந்தனர்.

இந்த பாலிடெக்னிக் தொடங்கப்பட்ட நேரத்தில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 2 பாலிடெக்னிக்கள் மட்டுமே இருந்தன. இப்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 25 பாலிடெக்னிக்கள் உள்ளன. அருகில் உள்ள கல்லூரியிலேயே மாணவர்கள் சேர்ந்து விடுவதாலும், வெளிமாவட்ட மாணவர்கள் இங்கே வருவதில்லை என்பதாலும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மாணவர்கள் வருவது குறைந்துகொண்டே வருகிறது.

கலந்தாய்வின் மூலம் வரும் மாணவர்களிடம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை வசூலிக்க முடியாது. அதனால் கல்லூரிக்கு நிதியாதாரம் போதுமானதாக இல்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் இயலவில்லை.

"1985 முதல் 1995-ம் ஆண்டு வரை ஊழியர்களுக்கான ஊதியம், அகவிலைப்படி ஆகியவை ஆலை நிர்வாகத்தால் அரசு விதிகளின்படி வழங்கப்பட்டு வந்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக 1.1.1996 முதல் இது நிறுத்தப்பட்டது. பின்னர் 2002-ம் ஆண்டு முதல் மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வைத்து பாலிடெக்னிக் நடத்தப்பட்டு வருகிறது. அரசு நிதியுதவி பெறும் கல்லூரியாக மாறினால், நல்ல மாற்றம் ஏற்படும்' என்கிறார் தருமபுரி மாவட்டக் கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் பணியாளர் நலச்சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளைத் சர்க்கரை ஆணையருக்கு அனுப்பியுள்ளோம். நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்கிறார் பாலக்கோடு சர்க்கரை ஆலையின் தனிஅலுவலர் கோவிந்தராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com