நாமக்கல், ஜூன் 5: பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த பல பள்ளிகளும் பத்தாம் வகுப்புத் தேர்வில் அந்தச் சாதனையை தக்கவைத்துக் கொள்ளவில்லை. ஆண்டுதோறும் தொடரும் இந்த நிகழ்வுகள் மூலம் பள்ளிகளின் சாதனைப் பட்டியல்களின் பின்னால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பந்தயக் குதிரைகளாக்கப்படுவது தெரிய வருகிறது.
2012-ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழக அளவில் முதல் 3 இடங்களையும் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளே கைப்பற்றின. பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த மாவட்ட தனியார் பள்ளிகள் மாநில அளவில் சிறப்பிடம் பிடிப்பது 2007-ம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதனால், தமிழக மாணவர்களின் பெற்றோரின் பார்வை நாமக்கல் மாவட்டப் பள்ளிகள் மீது திரும்பியுள்ளதுடன், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் செலவிட்டு தங்கள் பிள்ளைகளை இங்குள்ள பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன் காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 4) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாகவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் முன், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து பெற்றோர், மாணவ, மாணவிகள் குவிந்தனர். இதையடுத்து, பல பள்ளிகளில் ஒரே நாளில் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அட்மிஷன் இல்லை என்பதற்கான அறிவிப்புகளும் ஒட்டப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடிக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல பள்ளிகளும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அந்தச் சாதனையை தக்கவைத்துக் கொள்ளவில்லை.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 6 மாணவர்கள் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்ற நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ராசிபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி பி.கே.பூஜாஸ்ரீ தவிர வேறும் யாரும் மாநில அளவில் சிறப்பிடம் பெறவில்லை. இந்த நிலைமை ஆண்டுதோறும் தொடர்கிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மட்டும் நாமக்கல் மாவட்டப் பள்ளிகள் அதிகளவில் மாநில சிறப்பிடம் பிடிப்பதற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மட்டுமே பிளஸ் 1 வகுப்புகளில் சேர்க்கப்படுவதே காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது மாணவர் சேர்க்கையை முடித்துள்ள பல பள்ளிகளிலும் 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிறார் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வித் துறை அலுவலர் ஒருவர்.
அவர் மேலும் கூறியது:
குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளித்து மாநில அளவில் சிறப்பிடம் பிடிக்க வைப்பதே பள்ளிகளின் சாதனையாகும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் பல பள்ளிகளில் அதைச் செய்வதில்லை.
பத்தாம் வகுப்புத் தேர்வில் 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மட்டுமே தேர்வு செய்து, விடுமுறைகளின்றி இரு ஆண்டுகளும் பிளஸ் 2 பாடங்களையே படிக்கச் செய்து, மாநில அளவில் சிறப்பிடம் பிடிக்க வைக்கின்றனர்.
ஆனால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் அதே பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் படித்து வருபவர்கள் என்பதால், அந்தப் பள்ளிகளால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தச் சாதனையை தக்கவைக்க முடிவதில்லை.
இதன்மூலம், சாதனை மாணவர்களை மட்டுமே பிளஸ் 1-ல் தேர்வு செய்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடிக்க வைத்து, தங்கள் பள்ளிகளின் வணிகத்தை உயர்த்திக் கொண்டுள்ளன. எனினும், பள்ளிகளின் சாதனைப் பட்டியலுக்கு பின்னால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தங்கள் பிள்ளைகளே உள்ளனர் என்பதை பெற்றோர்கள் உணருவதில்லை என்றார் அவர்.
அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மீது அதிகளவில் பணத்தைக் கட்டி, அதிக மதிப்பெண்கள் வாங்க வைக்கும் நடைமுறை குதிரைப் பந்தயத்துக்கு ஒப்பானது. அதுவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.