ரூ.5.50 கோடியில் கட்டிமுடிக்கப்பட்ட மாதிரிப் பள்ளி கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

ரூ.5.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பொன்னேரி மாதிரிப் பள்ளிக் கட்டடத்தைத் திறந்து மாணவர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
Updated on
1 min read

ரூ.5.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பொன்னேரி மாதிரிப் பள்ளிக் கட்டடத்தைத் திறந்து மாணவர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
 அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள 13 மாவட்டங்களில் உள்ள 44 ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் மாதிரிப் பள்ளி தொடங்கப்பட்டது.
 தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு ஒன்றியத்தில் செக்கோடி, பென்னாகரம் ஒன்றியத்தில் சின்னம்பள்ளி, காரிமங்கலம் ஒன்றியத்தில் கெரகோடஹள்ளி ஊராட்சிக்குள்பட்ட பொன்னேரி ஆகிய மூன்று இடங்களில் கடந்த 2009-10-ஆம் கல்வி ஆண்டில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
 இப்பள்ளிகள் தொடங்கப்பட்டவுடன் அந்தந்தப் பகுதியில் ஏற்கெனவே, உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு கட்டடம் ஒதுக்கப்பட்டு, அங்கு தாற்காலிகமாகச் செயல்பட்டு வருகின்றன.
 இதில், காரிமங்கலம் ஒன்றியத்துக்கான மாதிரிப் பள்ளி, காரிமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது முதல்வர், 23 ஆசிரியர்கள் மற்றும் இளைநிலை உதவியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர், இரவுக் காவலர் உள்ளிட்டோரும் பணியாற்றி வருகின்றனர். மேலும், இப்பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் 323 பேர் பயின்று வருகின்றனர். தற்போது, தனியாக பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டதால், 560 மாணவர்கள் வரை பள்ளியில் பயில அனுமதி உள்ளது.
 இந்த நிலையில், இப்பள்ளிக்கென தனியாகக் கட்டடம் கட்ட, கெரகோடஹள்ளி ஊராட்சிக்குள்பட்ட பொன்னேரி பழத்தோட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாதிரிப் பள்ளிக் கட்டடம் ரூ.5.50 கோடியில் கட்டும் பணி தொடங்கி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவுபெற்றன.
 இரண்டு தளங்கள் கொண்ட இக்கட்டடத்தில் மூன்று திசை நுழைவு வாயில், மாணவ, மாணவியருக்கு தனித்தனி கழிப்பறைகள் என நேர்த்தியுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி முடிந்து பள்ளிக் கட்டடம் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை திறப்பு விழா நடைபெறாததால், பள்ளிக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. மாணவர்களின் நலன்கருதி இக்கட்டடத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பார்க்கின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com