தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடைகள் மற்றும் கழிப்பறைகள் ஏலத்தை வெளிப்படையாக நடத்திட வேண்டும் என பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை: சுற்றுலாத் தலமான, ஒகேனக்கலில் ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமாக பேருந்து நிலையம் மற்றும் 11 கடைகள், பூங்கா, பரிசல்துறை மற்றும் மீன் சந்தை ஆகிய இடங்களில் நவீன கழிப்பிடங்கள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலரின் நேரடி நிர்வாகத்தின் கீழ்
உள்ளது.
இந்தக் கடைகள், பூங்கா, நவீன கழிப்பிடங்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வெளிப்படையாக வாடகை ஏலத்துக்கு விட வேண்டும். ஆனால், அவ்வாறு ஏலம் விடப்படாமல், ஏலம் நடைபெற்றதாக பதிவேடுகளில் பதிந்திட முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்த 11 கடைகளுக்கு மார்ச் 6, 15, 22 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறுமென அறிவிப்பு வெளியிட்டு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன கழிப்பறைகளுக்கு மார்ச் 19, 22 ஆகிய இரண்டு தேதிகளில் ஏலம் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏலம் ஒத்தி வைத்ததற்கான காரணத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தின் தரப்பில் முறையாகத் தெரியப்படுத்தவில்லை. எனவே, இக் கடைகள் மற்றும் கழிப்பறைகளுக்கான ஏலம், அனைவரும் பங்கேற்கும் வகையில் வெளிப்படையாக நடைபெற தருமபுரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









