அரூர் விளையாட்டு அரங்கில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் ஓட்டம், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் வகையில் மைதான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டு அரங்கில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்கள் விளையாடுகின்றனர். அதேபோல், காலை மற்றும் மாலை நேரங்களில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால், இந்த விளையாட்டு மைதானத்தில் குடிநீர், கழிப்பிடம், மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால், நாளுக்கு நாள் விளையாட்டு மைதானத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனவே, அரூரில் உள்ள சிறு விளையாட்டு அரங்கு வளாகத்தில் மக்களுக்குத் தேவையான குடிநீர், மின் விளக்குகள், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.