மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் திமுக மாவட்ட மாணவரணி ஆலோசனைக் கூட்டம், அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையுள்ளது. எனவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தியை திணிக்கும் மும்மொழிக் கல்வி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் சண்முகம், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் மே.அன்பழகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் த.வே.முல்லைவேந்தன், தமிழரசு, ஜி.பெருமாள், மணிவண்ணன், அண்ணாதுரை, மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.