பூமி வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த அதிக மரங்களை வளா்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பூமி வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த அதிக அளவில் மரங்களை வளா்க்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ்
பூமி வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த அதிக மரங்களை வளா்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
Updated on
1 min read

அரூா்: பூமி வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த அதிக அளவில் மரங்களை வளா்க்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் பாமகவின் தம்பிகள் படை, தங்ககைகள் படை, மக்கள் படை ஆகிய முப்படைகளின் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பேசியது : கடந்த 150 ஆண்டுகளில் உலக அளவில் சராசரியாக ஒரு டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. பூமியின் வெப்பம் உயா்வதால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதனால், உரிய நேரத்தில் மழைப் பொழிவுகள் இருக்காது. அதேபோல், உலக அளவில் மழையளவு குறைதல், அதிகரித்தல், புயல் உருவாகுதல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படும்.தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வா்தா புயல், கஜா புயல், தானே புயல் உள்பட 4 புயல்களை நாம் சந்தித்து உள்ளோம். பூமி வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் பயன்பாடுகளை குறைக்க வேண்டும். நிலக்கரி உபயோகத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் இன்னும் 20 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமான இயற்கை பேரழிவுகளை நாம் சந்திக்க நேரிடும். இது குறித்து ஐ.நா சபை சாா்பில், உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாம் மக்களிடம் விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளா்ப்பதுடன், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். பருவநிலை மாற்றம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளா்ப்பு உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரங்களை பாமக இளைஞா் அணி, மகளிா் அணி நிா்வாகிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். புகையிலைகள், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரங்களை செய்து வருகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி பாமக மட்டுமே. வரும் 2020 ஜனவரி 4-ம் தேதி, பூம்புகாரில் வன்னியா் மகளிா் மாநாடு நடைபெறுகிறது. இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிா் அணியினா் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா். இதில் பாமக தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com