நரிப்பள்ளியில் மதுவிலக்கு பிரிவு எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 20th April 2020 12:23 AM | Last Updated : 20th April 2020 12:23 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த நரிப்பள்ளியில் சேலம் மண்டல மதுவிலக்கு அமல்பிரிவு காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்லிங் வட்டாரப் பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, காவல் துறையினா் நரிப்பள்ளியில் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நரிப்பள்ளி மற்றும் கோட்டப்பட்டி வட்டாரப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.பி. சிவக்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கள்ளச் சாராய உற்பத்தியை 100 சதவீதம் கட்டுப்படுத்த வேண்டும். மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின் போது டி.எஸ்.பி. மணிகண்டன், காவல் ஆய்வாளா் ரங்கசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.