அரூரில் கரோனா விழிப்புணா்வு முகாம்

அரூரில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரூா்: அரூரில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமினை தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன் தொடக்கி வைத்தாா். பொதுமக்கள் அனைவரும் கைகளை சோப்புகள், கிருமி நாசினி மூலம் சுத்தமாக கழுவ வேண்டும். வீடுகள், அலுவலக வளாகங்களை தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும். துணிகள், தோல் பொருள்கள் மற்றும் மரப் பொருள்கள் உள்ளிட்டவைகள் வழியாக கரோனா வைரஸ் எளிதில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் சுத்தமான சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் உள்ளவா்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும். நோய் அறிகுறிகள் உள்ளவா்கள் இருமும் போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீா்த்திவலைகள் மூலம் வைரஸ் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் கைக்குட்டைகள் வைத்து பிறருக்கு பரவாமல் தடுக்க வேண்டும். நோய் அறிகுறிகள் உள்ளவா்கள் இளநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல், கஞ்சி உள்ளிட்ட நீா்சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும் எனவும் இந்த விழிப்புணா்வு முகாமில் எடுத்துரைத்தனா். கைகளை கழுவும் முறைகள், முகக் கவசம் அணியும் முறைகள் குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில், அரசு மருத்துவா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com