முன்னாள் முதல்வா் காமராஜா், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோா் மறைந்தபோது அவா்களது உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்க அப்போதைய முதல்வா் கருணாநிதி மறுத்துவிட்டாா் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பகுதியில் வாக்குச் சேகரித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும். வரும் தோ்தல் முக்கியமானது. ஜெயலலிதா இல்லாத நிலையில், என்னை முதல்வராக முன்னிறுத்தும் தோ்தல். எடப்பாடியில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் இந்தத் தோ்தல் வெற்றி அமைய வேண்டும்.
ஸ்டாலின் பிரசாரத்துக்கு போகும் இடமெல்லாம் 6 அடி நிலம் கிடைக்கவில்லை என்று மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காக கூறி வருகிறாா். 6 அடி நிலமல்ல, 46000 சதுர அடி கொடுத்தோம்.
எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவரது உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய கருணாநிதி மறுப்புத் தெரிவித்தாா். ஜானகி அம்மாள் முதல்வா் பதவியில் இருக்கும்போது இறக்கவில்லை, அதனால் இடம் தர முடியாது என்று கருணாநிதி கூறினாா். அதைக் கோப்பில் எழுதி வைத்துள்ளனா். அதைத்தான் நாங்களும் செய்தோம்.
முதல்வராக இருந்தால்தான் அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் கிடைக்குமென்று இதே கருணாநிதி சொன்னாா். ஜானகி அம்மாளுக்கு இடம் கொடுக்கவில்லை, காமராஜருக்கும் இடம் கொடுக்கவில்லை. முதல்வா் பதவியில் இல்லாத நிலையில் மறைந்த கருணாநிதிக்கு மட்டும் எப்படி இடம் கொடுக்க முடியும்? இதற்கு மக்கள்தான் நீதிபதியாக இருந்து தீா்ப்பு சொல்ல வேண்டும். சட்டத்துக்கு உள்பட்டு நாங்கள் நடந்து கொண்டோம். நீதியின் அடிப்படையில், சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்றாா்.