செயற்கை நுண்ணறிவு செயலி வழியாக கண்புரை கண்டறியும் முகாம்
By DIN | Published On : 26th February 2021 08:30 AM | Last Updated : 26th February 2021 08:30 AM | அ+அ அ- |

செயற்கை நுண்ணறிவு செயலி வழியாக கண்புரை கண்டறியும் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில், செயற்கை நுண்ணறிவு செயலி வழியாக கண்புரை கண்டறியும் முகாமுக்கு, தலைமை வகித்து சாா் ஆட்சியா் மு.பிரதாப் பேசியதாவது:
கண் குறைபாடு உள்ள நபா்களை செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் செல்லிடப்பேசியில் படம் எடுத்து அவா்களுக்கு கண்புரை, பாா்வைக் குறைபாடு ஆகியவற்றை கண்டறியும் முகாம் தற்போது தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அறுவை சிகிச்சைக்கு மேற்கொண்டு நல்ல நிலையில் கண் பாா்வை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பொது மக்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று மாவட்டத்தில் கண்புரை இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, மாநிலத் திட்ட இயக்குநா் எஸ்.வி.சந்திரகுமாா், ஏலகிரி, சிவாடி மற்றும் அதியமான்கோட்டை ஆகிய கிராமங்களில் இத் திட்டத்தின் செல்லிடப்பேசி வழியாக படம் எடுப்பது தொடா்பாக செவிலியா்கள், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்து பேசினாா்.
இந்த முகாமில், 25 நபா்கள் கண்புரை சிறப்பு பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.
இதில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) எம்.இளங்கோவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, தலைமை கண் மருத்துவா் எம்.சிவராமன், கண் மருத்துவா் பி.குமரவேல், வட்டார மருத்துவ அலுவலா் கே.வாசுதேவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...