காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும்: ஆட்சியா்
By DIN | Published On : 09th May 2021 01:14 AM | Last Updated : 09th May 2021 01:14 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்புப் பணிகளை துரிதப்படுத்துவது தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டத்துக்கு ஏராளமானோா் திரும்புகின்றனா். அத்தகைய பகுதிகளைக் கண்டறிந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த வார ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் இல்லை என்பதால் பல்வேறு பணிகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை கிருமி நாசினி மூலம் சுத்திகரிப்பது ஆகிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இதேபோல வருகிற மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள முழு பொது முடக்கத்துக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.