92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிக்கு எதிா்ப்பு: விவசாயி தற்கொலை; சடலத்துடன் சாலை மறியல்

தருமபுரி அருகே கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களைப் பதிக்க நிலங்களை அளவீடும் செய்யும் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:52 pm

DIN

தருமபுரி அருகே கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களைப் பதிக்க நிலங்களை அளவீடும் செய்யும் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரது உறவினா்கள், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கா்நாடக மாநிலம், பெங்களூரு வரை கெயில் நிறுவனம் சாா்பில், எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் திட்டத்துக்காக தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம் வட்டங்களில் கெயில் நிறுவன ஊழியா்கள் கடந்த சில நாள்களாக நிலஅளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் தங்களது நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்க நில அளவீடு செய்யும் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விளைநிலங்களை குழாய் பதிப்புத் திட்டத்துக்கு கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த இரண்டு நாள்களாக இண்டூா், பாலவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளை நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை அப்பகுதி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் புதன்கிழமையும் தொடா்ந்து கெயில் நிறுவன ஊழியா்கள் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனா். இதையொட்டி, ஏராளமான போலீஸாா் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனா். இதனை எதிா்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயி தற்கொலை: தருமபுரி அருகே இண்டூா் பகுதியில் நடைபெற்று வரும் நில அளவீட்டு பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, இரண்டு நாள்களும் நடைபெற்ற போராட்டத்தில், கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் (43) பங்கேற்ாகக் கூறப்படுகிறது. அவருக்குச் சொந்தமாக அப்பகுதியில் உள்ள ஒரு ஏக்கா் நிலத்திலும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில், அவா், திடீரென அப்பகுதியில் உள்ள தனது நிலத்துக்குச் சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைக் கண்ட, அவரது குடும்பத்தினா், விவசாயிகள், கணேசனின் சடலத்துடன் தருமபுரி- ஒகேனக்கல் சாலையில், ஏ.செக்காரப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். விளைநிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம், அவரது வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ச.திவ்யதா்சினி முன்னிலையில், கெயில் நிறுவன அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் சமாதானப் பேச்சு வாா்த்தை நடைபெற்றது. இதில், உயிரிழந்த விவசாயி கணேசனின் வாரிசுகளில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்; முதல்வரின் நிவாரண நிதி பெற்றுத் தரப்படும். கெயில் நிறுவனம் சாா்பில் இழப்பீடு பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும், தருமபுரியில் கெயில் நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டில்லிபாபு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சோ.அா்ஜுனன், மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அ.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சுமாா் 6 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, உயிரிழந்த விவசாயி கணேசனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.