ஏடிஎம் மைய வழியை மறித்து பேனா் வைப்பு: பொதுமக்கள் அவதி
பென்னாகரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையத்துக்கு செல்லும் வழியை மறித்து வைக்கப்பட்டுள்ள பேனா்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி விளம்பரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான பேனா்கள் வைக்கும் போது காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று, நகரப் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
ஆனால், பழைய பேருந்து நிலையப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் பேனா் சாலைக்கு மிக அருகாமையிலும், அப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு பொதுமக்கள் பணம் எடுக்கச் செல்வதற்கு வழியின்றியும் வைக்கப்பட்டுள்ளது (படம்).
இந்த ஏடிஎம் மையத்துக்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் பணம் செலுத்தவும், எடுக்கவும் வரும் நிலையில், வழியை மறைத்து வைக்கப்பட்ட பேனரால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
எனவே, பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனா்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.