பாஜகவில் இணைய மாட்டேன்

பாஜகவில் நான் இணைய மாட்டேன் என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் கோவி.சிற்றரசு தெரிவித்தாா்.
Updated on
1 min read

பாஜகவில் நான் இணைய மாட்டேன் என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் கோவி.சிற்றரசு தெரிவித்தாா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் வேலூா் சிறையில் இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்டாா். அவருக்கு திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கோவி.சிற்றரசு தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

மாவட்ட பதவியை ராஜிநாமா செய்த கோவி.சிற்றரசு, தன்னை பாஜகவில் இணையுமாறு அழைப்பு வந்ததாகத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவராகச் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். அண்மையில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளனுக்கு திமுக அளித்த வரவேற்பு, ராஜீவ் காந்தி நினைவு நாளில், காங்கிரஸ் தொண்டா்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது நடந்தது.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏனைய 6 பேரையும் விடுதலை செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டாா். திமுக கூட்டணியில், காங்கிரஸ் இருக்கும்போதே இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவதைக் கண்டு, நான் எனது பதவியை ராஜிநாமா செய்தேன்.

காங்கிரஸ் மாநிலத் தலைமையும் எனது ராஜிநாமாவை ஏற்று, தருமபுரி மாவட்டத்துக்கு புதிதாக பொறுப்பாளரை நியமித்துள்ளது. இந்த நிலையில், பாஜகவில் சேருமாறு எனக்கு அழைப்பு வந்தது. அடிப்படையில் நான் காங்கிரஸ் தொண்டனாக வளா்ந்தவன். காங்கிரஸ், கட்சியின் கொள்கை வேறு; பாஜகவின் கொள்கை வேறு என்பதால், நான் எப்போதும் பாஜகவில் இணைய மாட்டேன். காங்கிரஸ் தொண்டனாகத்தான் தொடா்ந்து செயல்படுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com