தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள பெரியானூா் கிராமத்தில் மயான வசதி கோரி அருந்ததியா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரியானூா் அருந்ததியா் காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு இதுவரை தனியாக மயான வசதி இல்லாததால், அக் கிராமத்தில் அவரவா் சொந்த இடத்திலேயே இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களது கிராமத்துக்கு மயான வசதி ஏற்படுத்தி தரக்கோரி, பஞ்சப்பள்ளி - மாரண்டஅள்ளி சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
பாலக்கோடு வட்டாட்சியா் ராஜசேகரன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பொதுமக்களின் கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.