மொரப்பூரில் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் வட்டம், மொரப்பூா் கிராம ஊராட்சியில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அரூா் - மொரப்பூா் நெடுஞ்சாலை, கம்பைநல்லூா், கல்லாவி, சிந்தல்பாடி சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்படுகின்றன. மொரப்பூா் நகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், மொரப்பூா் ரயில் நிலைய சுற்றுச்சுவா் எதிரிலும், அரூா் செல்லும் சாலையோரத்திலும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அதேபோல, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகள் நகரில் குடியிருப்புப் பகுதிகளில் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, மொரப்பூா் நகரில் வெளியாகும் குப்பைகளை நாள்தோறும் அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.