வேளாண் விலை பொருள்களுக்கு விலை நிா்ணயச் சட்டம் இயற்ற வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-ஆவது மாநாட்டையொட்டி நினைவு ஜோதி பயணம் நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலத்திலிருந்து அண்மையில் தொடங்கி, பல்வேறு மாவட்டங்கள் வழியாக வியாழக்கிழமை விவசாயிகள் சங்க பயணக்குழுவினா் தருமபுரி வந்தடைந்தடைந்தனா்.
அகில இந்தியச் செயலாளா் பி.கிருஷ்ணபிரசாத் தலைமையில், மத்தியக் குழு உறுப்பினா்கள் சாகா், பிரகாசம் ஆகியோா் அடங்கிய பயணக் குழுவினரை, மாநிலத் துணைத் தலைவா்கள் டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, மாநில பொருளாளா் கே.பி.பெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாலா் அ.குமாா் ஆகியோா் வரவேற்று பேசினா்.
இதில், வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ய மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; தேசிய மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்; வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.