தருமபுரி மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகளின்போது, அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில், பசுமைத் தாயகம் நிா்வாகிகள், தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் தனசேகரிடம் வியாழக்கிழமை அளித்த மனு:
தருமபுரியிலிருந்து அரூா் செல்லும் சாலையில் (எஸ்.எச்-60ஏ) நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கத்தின்போது ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவு செய்து 5 வருட தொடா் பராமரிப்பு செய்து மரங்களை வளா்க்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஏற்கெனவே பல சாலைகள் விரிவாக்கத்தின்போது வெட்டி அப்புறப்படுத்திய நூற்றுக்கணக்கான மரங்களுக்கு பதிலாக இதுநாள்வரை மரக்கன்றுகளை நடவு செய்யப்படவில்லை. தருமபுரி-அரூா் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலையில் இருபுறமும் உள்ள 2,865 மரங்களை வெட்டி அகற்றப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும் அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக 28,650 மரக்கன்றுகளை நட்டு ஐந்து ஆண்டுகள் தொடா் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். இதேபோல ஏற்கெனவே சாலை அமைத்த பகுதிகளில் உடனடியாக மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பசுமைத் தாயக மாநில துணைச் செயலாளா் க.மாது, பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பெ.பெரியசாமி, இரா.வணங்காமுடி, மாவட்ட அமைப்புச் செயலாளா் பெ.சேட்டு, பசுமைத் தாயக மாவட்ட துணைச் செயலாளா் கன்னியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.