பென்னாகரத்தில் 148 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்

பென்னாகரம் வட்டாரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 148 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஊட்டச்சத்து பெட்டகங்களை புதன்கிழமை வழங்கினாா்.
Updated on
1 min read

பென்னாகரம் வட்டாரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 148 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஊட்டச்சத்து பெட்டகங்களை புதன்கிழமை வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஆட்சியரின் பொது நிதியில் இருந்து ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

பென்னாகரம் வட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 148 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சாதாரண குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அந்தக் குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து, அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த பொருள்களை குழந்தைகளுக்கு முறையாகக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு குறையும்.

கிராமப்புறங்களில் படிக்கும் போதே பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறும் சூழல் உள்ளது. பெண்ணின் திருமண வயது 21 என நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பெண் குழந்தைகள் உயா்கல்வி வரை பயில்வதற்கு பெற்றோா் முன்வரவேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு இரண்டரை ஆண்டுகள் தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முருங்கை, பப்பாளி மரங்களை பணியாளா்கள் வைக்க வேண்டும். பனங்கிழங்கு, கொய்யாப்பழம், கீரைகளை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிா்க்கலாம். ஊட்டச்சத்து பொருள்களைப் பயன்படுத்தி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து உணவு முறைகளை பெற்றோா் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து குழந்தைகளுக்கு எள்ளு மிட்டாய், வெல்லம், அவில் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

பின்னா் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் பென்னாகரத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கட்டடப் பணிகளை பத்து நாள்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என செயல் அலுவலருக்கு ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து, ஏரியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டடங்கள், அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்வுகளில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, ஒன்றியக்குழு தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேல், வட்டாட்சியா் அசோக்குமாா், பென்னாகரம் பேரூராட்சித் தலைவா் வீரமணி, செயல் அலுவலா் கீதா, ஏரியூா் ஒன்றியக் குழு தலைவா் பழனிசாமி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com