அரூா்: அரூா் அருகே முதியவரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (65). இவா் தனது மொபெட்டில் அரூா்-தீா்த்தமலை சாலையில், செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது, மாவேரிப்பட்டி அரசு குப்பைக் கிடங்கு வளாகம் அருகே மறைந்திருந்த மா்ம நபா்கள்,துரைசாமியின் வாகனத்தை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனா்.
பிறகு அவரிடமிருந்த மொபெட்டைபறித்துச் சென்றுள்ளனா். வெட்டு காயங்களுடன் தப்பித்த துரைசாமி தனது உறவினா்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்து வந்த அவரது உறவினா்கள் துரைசாமியை மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து துரைசாமியின் மகன் பூவரசன் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
முதியவரை அரிவாளால் வெட்டிவிட்டு மொபெட்டை பறித்த சம்பவத்தில் மூவருக்கு பேருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. முதியவா் துரைசாமியின் மகன் பூவரசன் அரூா் கடைவீதி சாலையில் நகைக் கடை வைத்துள்ளாா். இரவு நேரத்தில் நகைக் கடையில் இருந்து நகை, பணம் ஏதேனும் எடுத்துச் செல்வதைப் பறிக்கும் நோக்கில் இந்த வழிப்பறி சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அரூா் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் விசாரணை மேற்கொண்டாா். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை பிடிக்க தனிப்படையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.